டெல்லியில் முதல்வர் முன்வைத்த 14 கோரிக்கைகள்!

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியுடன் 30 நிமிடங்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது அவரிடம் 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் அளித்துள்ளார்.

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமையகமான அண்ணா – கலைஞர் அறிவாலய கட்டடத்தின் திறப்பு விழா ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

வெள்ளியன்று காலை முதலே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் மற்றும் எம்பிக்களைச் சந்தித்தார்.

அடுத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை வழங்கினார்.

டெல்லியில் திமுக தலைமை அலுவலக திறப்பு விழாவிற்கான அழைப்பிதழையும் வழங்கினார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் அளித்த 14 கோரிக்கைகளின் விவரம் இங்கே…

நீர்வளப் பிரச்சனைகள்

காவிரியின் குறுக்கே கர்நாடகாவால் மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பான பிரச்சனை.

மீன்வளம்

அ) பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்.

ஆ) ‘கச்சத்தீவு’ மீட்பது மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது.

எரிசக்தி

அ) நிலக்கரி குறித்த விவகாரங்கள் – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி பெறுவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் கூடுதலான இரயில் தொடர்கள் ஒதுக்கீடு செய்யக் கோருதல்.

ஆ) ரெய்கார் – புகழுர் உயர் மின் அழுத்த மின்தொடரமைப்பினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக அறிவித்தல்.

நிதி

அ) மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்வது.

ஆ) ஜுன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்குதல்.

சுகாதாரம்

அ) மருத்துவ மாணவர் சேர்க்கை கொள்கை மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) எதிர்ப்பு.

ஆ) உக்ரைனில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பு தடைபட்ட நிலையிலிருந்து இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழியைக் கண்டறிதல்.

வேளாண்மை

பிரதம மந்திரி வேளாண்மை பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு (PMFBY) ஒன்றிய அரசின் பங்களிப்பை முந்தைய நிலைக்கு உயர்த்துதல்.

தொழில்கள்

அ) காலணி உற்பத்தியில் பிஎல்ஐ (PLI) திட்ட அறிமுகம்.

ஆ) டிடிஐஎஸ் (DTIS) திட்டத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கு முன்னுரிமை ஒதுக்கீடு.

இ) தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆய்வுக்கூடம் அமைத்தல்.

ஈ) சேலம் எஃகு ஆலையின் மிகை நிலம் பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்கப்படுதல்.

உ) மப்பேடுவில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் (MMLP) வரை ரயில் பாதை அமைத்தல்.

பள்ளிக்கல்வி

தேசிய கல்வி கொள்கை -2020

சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் – II – இந்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 50 : 50 பங்கு அடிப்படையில் ஒப்புதல்.

பிற்படுத்தப்பட்டோர் நலன்

2022ல் ஹஜ் புனிதப் பயணத்திற்கான புறப்படும் இடமாக சென்னையை அறிவிக்கக் கோரிக்கை.

பொது

அ) இலங்கைத் தமிழர் பிரச்சினை – ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள்.

ஆ) இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக அல்லலுறும் இலங்கைத் தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக.

போக்குவரத்து

தமிழ்நாட்டில் புதிய ரயில்வே திட்டங்கள்

சுற்றுச்சூழல்

அ) நியூட்ரினோ ஆய்வக (INO) திட்டத்தை கைவிட கோரிக்கை

  1. b) கூடங்குளம் அணுமின் திட்டம் – செலவழித்த அணு எரிபொருள் நீக்குதல் (SNF) தொடர்பாக.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்

நரிக்குறவர்கள் / குருவிக்காரர்கள் சமூகங்களை தமிழ்நாட்டின் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளித்தார்.

பா. மகிழ்மதி

01.04.2022 10 : 50 A.M

Comments (0)
Add Comment