நடிகர் சங்கத் தேர்தல்: பாண்டவர் அணி வெற்றி!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன.

தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர்.

சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

எனவே, தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கிக் கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டன.

அதன்பிறகு ‘தேர்தல் செல்லாது’ என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர்.

அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் செல்லும் என்றும், வாக்குகளை எண்ணி முடிவுகளை வெளியிடவும் உத்தரவிட்டது.

அதன்படி, நேற்று காலை 8 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், பலத்த பாதுகாப்புகளுடன் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றது.

மொத்தம் 2 ஆயிரத்து 500 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் 1,150 வாக்குகள் தபால் மூலம் பதிவாகின.

இதில், பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1701 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

21.03.2022 10 : 50 A.M

Comments (0)
Add Comment