ஈழத்து அறிஞரின் தமிழ்ப்பணி!

ஈழத்துத் தமிழறிஞர் க.சச்சிதானந்தன் நினைவுநாள் (மார்ச் – 21)

யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை, மாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை (தும்பளை), தெய்வானைப்பிள்ளை (மாவிட்டபுரம்) ஆகியோருக்குப் மகனாகப் பிறந்த சச்சிதானந்தன், மகாவித்வான் நவநீதகிருஷ்ண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர்.

காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேசுவரா கல்லூரி (1938-1940) ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

தந்தையாரிடம் வானியலும் சோதிடமும் சிவப்பிரகாச தேசிகரிடமும் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடமும் பாலசுந்தரக்குருக்களிடமும் சமஸ்கிருதக் கல்வியும் பயின்றார். மதுரைத் தமிழ்ப் பண்டிதர் பட்டமும் பெற்றார்.

1971-ம் ஆண்டில் லண்டனில் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். 2001-ம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை உடையவர்.

இவர் சச்சிதானந்த என்ற பெயரிலும், ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி ஆகிய புனைபெயர்களிலும் எழுதிய இவர், 2008 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி மறைந்தார்.

‘ஆனந்தத் தேன்’ உள்ளிட்ட கவிதைகள் மட்டுமன்றி ‘அன்னபூரணி’ என்ற புதினத்தையும், தமிழரசுக் கட்சித் தலைவர் வன்னியசிங்கத்தின் வரலாறை ‘தியாக மாமலை’ என்ற நூலாக எழுதியுள்ளார். ஏராளமான கட்டுரைகள், நாடகங்களை எழுதியுள்ளார்.

சுவாமி விபுலாநந்தரின் படியெடுக்கும் மாணாக்கராகச் சில காலம் இவர் சேவையாற்றினார். அதனால் இவருக்கு ஆய்வுத்துறையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ‘தமிழர் யாழியல்’ என்ற இவரது நூல் இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த ஆய்வு நூலுக்கான விருதைப் பெற்றது.

‘மஞ்சுகாசினியம் – இயங்கு தமிழியல்’ என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார். யாழ்ப்பாண வரலாற்றை விவரிக்கும் ‘யாழ்ப்பாணக் காவியம்’ என்ற நூல் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு, வடகிழக்கு மாகாண இலக்கியப் பரிசு, சம்பந்தர் விருது ஆகியவற்றைப் பெற்றது.

சச்சிதானந்தத்தின் நூல்கள்

ஆனந்தத்தேன் (கவிதை) 1955
தியாக மாமலை வரலாறு (1959)
யாழ்ப்பாணக் காவியம் (1998)
தமிழர் யாழியல் – ஆராய்ச்சி (1967)
மஞ்சு காசினியம் : இயங்கு தமிழியல் (2001)
Fundamentals of Tamil Prosody (2002)
இலங்கைக்காவியம் : பருவப் பாலியர் படும்பாடு (2002)
மஞ்சு மலர்க்கொத்து (சிறுவர் பாட்டு) (2003)
எடுத்த மலர்களும் கொடுத்த மாலையும் – கவிதை (2004)
S.J.V. Chelvanayaham (அச்சில்)

கட்டுரைகள், கவிதைகள்

தமிழன் (மதுரை) சக்தி ஈழகேசரியில் இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள்,

ஈழகேசரியில் தொடராக வெளிவந்த அன்னபூரணி என்ற முழு நாவல் – (1942) சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிகையில் உளவியல் கட்டுரை.

யாழ் பல்கலைக்கழக வெள்ளி விழாவின்போது சமர்ப்பித்த வானியல் (ஆய்வுக் கட்டுரை)

ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கத்தில் படிக்கப்பட்ட தமிழ் ஒலி மூலங்கள். (1989)

கலாநிதி கு.சிவப்பிரகாசம் நினைவாக வாசிக்கப்பட்ட உளவியல் அடிப்படையில் உவம இயல். (1990)

யாழ் பல்கலைக்கழகத்தில் வாசிக்கப்பட்ட இடைச்சொல் பற்றிய மூன்று எடுகோள்கள் (1991)

விருதுகள்

சாகித்திய ரத்ன – இலங்கையில் இலக்கியத்துக்க வழங்கப்படும் அதியுயர் விருது
சம்பந்தன் விருது (2001)
வட கிழக்கு மாகாண ஆளுநர் விருது (2003)
தந்தை செல்வா நினைவு விருது (2004)
இலங்கை இலக்கியப்பேரவை விருது (2004)
கலாகீர்த்தி தேசிய விருது (2005)

Comments (0)
Add Comment