கிராமங்களில் இருந்து ஒலிம்பிக் வீரர்கள் உருவாக வேண்டும்!

– பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் வேண்டுகோள்

கிராமப்புற இளைஞர்களிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் விதமாக, ‘சாம்பியனை சந்தியுங்கள்’ என்கிற தொலைநோக்குத் திட்டம் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் சாதனை படைத்த இந்திய விளையாட்டு வீரர்கள் தங்களது சொந்த ஊர்களில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடும் விதமாக இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இரு முறை பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், தமது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் பள்ளி மாணவர்களைச் சந்தித்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாரியப்பனுக்கு நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் தேசியக் கொடியை அசைத்து பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒலிம்பிக் வீரர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் வீடியோ தொகுப்பு ஒளிபரப்ப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டி அனுபவம், உணவுப் பழக்கம், கிராமத்தில் இருந்து ஒலிம்பிக் வரை செல்லும் போது சந்தித்த சவால்கள் குறித்து மாணவ – மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் பதிலளித்தார்.

அப்போது பேசிய மாரியப்பன், “கிராமப் பகுதிகளில் இருந்து அதிக விளையாட்டு வீரர்கள் வரவேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

பிட் இந்தியா, கேலோ இந்தியா போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவிற்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 19 பதக்கங்கள் கிடைத்தன. அடுத்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா குறைந்தபட்சம் 100 பதக்கங்களையாவது வெல்லும் வாய்ப்புள்ளது.

அடுத்தபடியாக, உலக சாம்பியன் மற்றும் ஆசியப் போட்டிகளுக்காக தயாராகி வருகிறேன். சேலத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை இழை ஓடுதள மைதானம் வரவிருக்கிறது.

இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் உருவாக வாய்ப்புள்ளது. விளையாட்டு அகாடமியை உருவாக்கும் பணியையும் தொடங்கியுள்ளேன்” எனக் கூறினார்.

25.02.2022 12 : 30 P.M

Comments (0)
Add Comment