பள்ளி போகவில்லை; ஆனால் பல்கலைக் கழகத்தில் படிக்கிறேன்!

– இளையராஜாவின் முதல் மாணவன் லிடியன்

’வேர்ல்டு பெஸ்ட்’ இசை விருதைத் தமிழகத்தைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் வாங்கியபோது ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் அந்தச் சின்னஞ்சிறு சிறுவன்மீது விழுந்தது.

தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ‘Barroz’ படத்துக்கு இசையமைப்பாளராகியுள்ள லிடியனுக்கு, அதைவிடப் பெரு மகிழ்ச்சி, ‘இசைஞானி இளையராஜாவின் முதல் மாணவன்’ என்ற அடையாளத்தைப் பெற்றிருப்பது.

“இளையராஜா சார்கிட்ட மாணவனா சேர ஒரு வருஷத்துக்கு மேல காத்திருந்தேன். அவருடைய முதல் மாணவன் ஆனது பெரிய ஆசீர்வாதம். இளையராஜா அங்கிள் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தவுடனே எங்க அப்பா அழுதுட்டார்.

சின்ன வயசிலேயே ‘நம்ம சாமி யார்?’னு அப்பா கேட்டால் நானும், அக்காவும் ‘இளையராஜா’ன்னு பதில் சொல்லுவோம். எங்க குடும்பம் இளையராஜா அங்கிளை அப்படித்தான் பார்க்குது. தூங்குறப்போ ‘Nothing but wind’, ‘திருவாசகம்’ கேட்பேன். ஒவ்வொரு நாளும் அவர் இசையுடன்தான் விடியும்” – கிடாரில் மீட்டப்பட்ட தந்தியின் அதிர்வுகள்போல் நரம்புகளில் ஊடுபாவும் ‘ராஜ’ விசுவாசத்துடன் பேசத்தொடங்கினார் லிடியன்.

“இரண்டு வாரமா அங்கிள் கிட்ட க்ளாஸ் போயிக்கிட்டிருக்கேன். ரொம்ப ஆரோக்கியமான உரையாடலா இருக்கும்.

நெகட்டிவ் ஹார்மோனி, ஜாஸ்னு நிறைய இசை வடிவங்கள் பற்றிச் சொல்லிக் கொடுத்தார்.

‘The man filled with wisdom’னு அவரைப் பத்திச் சொல்லலாம். ரொம்ப அன்பா சொல்லிக் கொடுப்பார். ‘வாங்க தம்பி’ன்னு கூப்பிடுவாரு. சில சமயம் ‘லிடியன்’னும் உரிமையுடன் கூப்பிடுவார்.

என்னோட கீ-போர்டு எடுத்துட்டுப்போய் அவர் முன்னாடி வாசிச்சுக் காட்டுவேன். ரசித்துக் கேட்பார். சின்ன வயசிலயே இசைமேல ஆர்வம் இருந்ததால ஸ்கூல் போறதை நிறுத்திட்டேன்.

என்னோட உண்மையான கல்வி இப்போதான் தொடங்குது. அதிலும் இளையராஜாங்கிற மாபெரும் பல்கலைக்கழகத்தில் இருந்து தொடங்குது.

இளையராஜா அங்கிள் பாட்டு அந்தக் காலக்கட்டத்தில் உருவானதால் இப்போ இருக்கிற ஆடியோ சிஸ்டத்தில் ஆடியோ குவாலிட்டி குறைவாகத்தான் இருக்கும்.

அதனால் அந்தப் பாடல்களை லாக்டெளன் நேரத்துல ரீ – கிரியேட் பண்ணினோம். எல்லாம் ஒரிஜினல் நோட்ஸ் எடுத்துப் பண்ணினோம். ஃப்ரூட் அக்காவும், நாதஸ்வரம் அப்பாவும் பாடிக்கிட்டே வாசிப்பாங்க.

மத்த புரோக்கிராம் வொர்க் மற்றும் சீக்வென்ஸ், மிக்ஸிங் இதெல்லாம் நான் பண்ணினேன். தொடர்ந்து முப்பது நாள் வரைக்கும் இதைப் பண்ணிட்டிருந்தோம்.

அப்போ, ‘Nothing but wind’ ஆல்பத்தில கம்போஸ் செய்த பகுதியை எடுத்து வொர்க் பண்ணினோம். 1986-ல் ராஜா சார் வெளியிட்ட ஆல்பம் இப்பவும் பிரமிப்பா இருக்குது.

அதை வொர்க் பண்ணுனப்ப இளையராஜா சார் கிட்ட இருந்து பாராட்டி மெசேஜ் வந்தது. உடம்பெல்லாம் சிலிர்த்திடுச்சு. அதுக்கு அப்புறம் அவருடைய ‘திருவாசகம்’ ஆல்பத்தில் ‘பொல்லாவினை’ பாடலை எடுத்து வொர்க் பண்ணினோம்.

எங்க அப்பா, அக்கா, நான் மூணு பேரும் சேர்ந்து பாடியிருப்போம். மிக்ஸிங் வேலைகளையும் பண்ணியிருந்தேன். இதை யூடியூப்ல பார்த்துட்டு இளையராஜா அங்கிள் வீடியோ காலில் கூப்பிட்டுப் பாராட்டினார்.

அதிலும் குறிப்பா அப்பா குரல் தன்னோட குரல் மாதிரியே இருக்கிறதா அவர் பாராட்டினது ரொம்பப் பெரிய விஷயம். என்னோட பிறந்தநாளில் அவரை நேரில் பார்த்து ஆசீர்வாதம் வாங்கினேன். நாதஸ்வரம் கிப்ட் பண்ணினார்” என்று மூச்சுவிடாமல் இளையராஜா பற்றிப் பேசும் லிடியன் ‘Barroz’ படம் பற்றியும் பேசினார்.

“‘வேர்ல்டு பெஸ்ட்’ விருது கிடைத்தவுடனே மோகன்லால் சார்கிட்ட இருந்து அப்பாவுக்கு போன் வந்தது. ‘குழந்தைகள் சம்பந்தப்பட்ட படம் பண்றோம். ஃபேன்டசி ஜானர். 3டி படமும்கூட.

இந்தப் படத்துக்கு லிடியன் இசையமைக்க முடியுமா’ன்னு கேட்டார். உடனே ஓகே சொல்லிட்டேன்.

கொச்சியில் மோகன்லால் சாரைப் பார்த்துப் பேசினேன். தன்னோட பையன் மாதிரி என்னைக் கனிவா நடத்தினார். நான் இசையமைக்கும் முதல் படமே பேன் இண்டியா படமா வர்றது ரொம்ப ரொம்ப சந்தோஷம்.” என்கிறார் லிடியன்.

– நன்றி: சுரேஷ் ஆதித்யா முகநூல்பதிவு

Comments (0)
Add Comment