நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலம்!

இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை தலைநகர் புதுடெல்லியில் உள்ள ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

முன்னதாக, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக முப்படைகளின் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பின் மரியாதையை தேசியக் கொடி ஏற்றிய பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

குடியரசு தின விழாவையொட்டி ராஜபாதையில் முப்படைகளின் கம்பீர அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, நாட்டின் பண்பாட்டை பறை சாற்றும் கலைநிகழச்சிகள் நடைபெற்று வருகின்றன.

முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக வானில் 75 போர் விமானங்கள் அணிவகுத்துச் சென்று வீரசாகசங்களை வானில் நடத்திக்காட்ட உள்ளன.

குடியரசு தினவிழா அணிவகுப்பை கண்டுகளிக்க ஏதுவாக ராஜபாதையின் இருபுறங்களிலும் 10 எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் ஆகிய சவால்களுக்கு இடையே இந்த விழாவையொட்டி பல அடுக்கு பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில் இருந்து சில பகுதிகள்.

*நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

*விடுதலைக்காக போராடிய கதாநாயகர்களை நினைவு கூரும் வாய்ப்பாக குடியரசு தினம் விளங்குகிறது.

*இன்று, நமது ராணுவ வீரர்களும், பாதுகாப்புப் படையினரும் தேசப் பெருமிதத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். இமயமலையின் தாங்க முடியாத குளிரிலும், பாலைவனத்தின் கடும் வெப்பத்திலும் குடும்பத்தை விட்டு வெகு தொலைவில் தாய்நாட்டைக் காத்து வருகின்றனர்.

*கடந்த ஆண்டு நமது விளையாட்டு வீரர்களும் ஒலிம்பிக்கில் தங்கள் முத்திரையைப் பதித்தனர். இந்த இளம் சாம்பியன்களின் தன்னம்பிக்கை இன்று கோடிக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது.

*கொரோனாவால்  கொண்டாட்டம் குறைவானாலும், உணர்வுகள் சக்தியுடையதாகவே உள்ளது.

*கொரோனா பேரிடரில் இருந்து ஏராளமானோரின் உயிரைக் காப்பாற்றியது ஆறுதலாக உள்ளது.

*ஸ்டார்ட் அப் சூழலை மிகத் திறமையாக பயன்படுத்தி, நமது இளம் சுய தொழில் முனைவோர் முத்திரையை பதித்துள்ளனர்.

*உலகில் புதுமையான பொருளாதாரத்தைக் கொண்ட 50 நாடுகளில் இந்தியாவும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

*நவீன ராணுவ திறன்கள் மூலம் உலகின் சக்திவாய்ந்த கப்பற்படை கொண்ட நாடாக இந்தியாவும் மாறியுள்ளது.

Comments (0)
Add Comment