வெற்றிக்குத் தேவை ஆர்வமும் வேலையில் ஈடுபாடும்!

தன்னம்பிக்கைத் தொடர்  – 13

நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.

அங்கே ஒரு விற்பனை நிலையத்தில் வேலை கேட்டார்.

“சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?” என்று விற்பனை நிலைய மேலாளர் கேட்க, ”நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்” என்றார் நம்ம ஆள்.

“அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் என்று ரிப்போர்ட் தர வேண்டும்” என்று கூறி பணிக்கு அனுமதித்தார்.

முதல் நாள் கடை மூடும் நேரத்தில் வந்தார் மேலாளர்.

“இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?”

“ஒருவரிடம் மட்டும்தான்!”

“என்ன ஒருத்தர் மட்டுமா? ம்ஹும். உன்னை நீ இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் அவர்களைப் போல் மாற முயற்சிக்க வேண்டும்.”

“சரி, எத்தனை டாலருக்கு வியாபாரம் செய்தாய்?”

‘$10.12.347.64″

“ஒரே ஒரு நபரிடம் பத்து லட்சம் டாலருக்கு மேல் விற்பனையா? அப்படி என்ன விற்றாய்?” முதலில் அவரிடம் சிறிய தூண்டில் விற்றேன். பிறகு கொஞ்சம் பெரிய தூண்டில், அதைவிடப் பெரிய தூண்டில், ஃபிஷ்ஷிங் ராட், ஃபிஷ்ஷிங் கியர் எல்லாம் விற்றேன்”

“அவர் என்ன அவ்வளவு பெரிய மீன் பிடிப் பிரியரா? பலே பலே அப்புறம்…?

“அவரிடம் ‘எங்கே மீன் பிடிக்கிறீர்கள்? என்று கேட்டேன் அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு படகைக் காட்டினேன். அது அவருக்குப் பிடித்துப் போனது. அவர் ‘என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா? என்று தெரியவில்லையே” என்றார்.

நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு நான்குக்கு 4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம், “நீங்கள் எங்க தங்கியிருக்கிறீர்கள்?” எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவரிடம் 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள டெண்ட்டையும் விற்றேன்.” என்றார் அந்த விற்பனையாளர்.

“நீ சூப்பரான ஆள்தான். ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடம் இவ்வளவு விற்றுள்ளாயே!” விற்பனைப் பிரிவு மேலாளர் அதிர்ச்சியும் திகைப்புமாக நம்மாளைப் பாராட்டினார்.

“அய்யோ, இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார்.

நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன். அப்புறம்தான் இவற்றையெல்லாம் வாங்கினார்” என்றார் நம்ம விற்பனையாளர்.

எந்த ஒரு வேலையிலுமே ஈர்ப்பும் பிடிப்பும் இன்னும் இன்னும் மேலே என்னும் எதிர்பார்ப்பும் இருந்தால், எதையும் சாதிக்க முடியும். எத்தனை உயரம் வேண்டுமானாலும் போக முடியும் என்பதற்கு இந்தக் கதை ஒரு உதாரணம்.

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘ஒரு கதை… ஒரு விதை…’ என்ற நூலிலிருந்து…

Comments (0)
Add Comment