காகித தேசியக் கொடியை மட்டும் பயன்படுத்தவும்!

  • மத்திய அரசு உத்தரவு

இந்தியாவின் 75-வது குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசியக் கொடி பயன்பாடு குறித்த சில நடைமுறைகள் குறித்தான கடிதத்தை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், “தேசியக் கொடி என்பது நாட்டு மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. தேசியக் கொடிக்கு உரிய மரியாதையும், கண்ணியமும் அளிக்கப்பட வேண்டும்.

இருப்பினும், தேசியக் கொடி பயன்பாடு தொடர்பான சட்டங்கள், பழக்கவழக்கங்கள், மரபுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் அரசு அமைப்புகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை அவ்வப்போது கண்டு வருகிறோம்.

இந்தியக் கொடி சட்டத்தின்படி, காகிதத்தால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை மட்டுமே முக்கியமான தேசிய, கலாசார, விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். அப்படி அவர்கள் பயன்படுத்துவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு, தேசியக் கொடிகளை அப்படியே தரையில் வீசி எறியக்கூடாது. கொடிக்கான மரியாதையுடன் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

இதை பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அச்சு, மின்னணு ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளை உள்துறை அமைச்சக இணையதளத்தில் பார்க்கலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment