பொறக்கும்போது இருந்த குணம் போகப்போக மாறுது!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம்
– காண்பதற்கே

உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம்
– ஆற்றில்

இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம்
– ஆனால்

இத்தனையும் மனிதரிடம்
மொத்தமாய் வாழுதடா

பொறக்கும்போது பொறந்த குணம்
போகப் போக மாறுது  – எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது – மனிதன்…

(பொறக்கும்போது)

பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது  – ஒரு
பஞ்சையைத்தான் எல்லாஞ்சேர்ந்து
திருடனென்றே உதைக்குது – மனிதன்

(பொறக்கும்போது)

காலநிலைய மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது  – புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்புடிச்சி ஆட்டுது  – வாழ்வின்
கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது  – ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது – மனிதன்…

(பொறக்கும்போது)

புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை  – பச்சைப்
புளுகை விற்றுச் சலுகை பெற்ற மந்தை  – இதில்
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை  – இதில்
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால்  – நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால்  – நாம்
உளறி என்ன? கதறி என்ன?
ஒன்றுமே நடக்கவில்லை
தோழா  – ரொம்ப நாளா…!

(பொறக்கும்போது)

– 1957-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘சக்கரவர்த்தி திருமகள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
இசை: ஜி.ராமநாதன்,  குரல்: சீர்காழி கோவிந்தராஜன்

Comments (0)
Add Comment