விதிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம்!

தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தின் பாரம்பரிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டு போட்டிகளை நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜல்லிக்கட்டு போட்டியையும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, “ஜல்லிக்கட்டில் காளைகளின் உரிமையாளர்கள், அவர்களைச் சார்ந்தவர்களுமாக 5, 6 பேர் வருவது வழக்கம். இதைக் கட்டுப்படுத்தி, காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்றாக பழகியுள்ள ஒரு உதவியாளர் அனுமதிக்கப்படுவார்.

ஆனால், அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சிக்கு 2 நாட்களுக்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாதவர்கள் ஜல்லிக்கட்டு நடக்கும் வளாகத்தில் நுழைய முடியாது.

காளைகளை பதிவு செய்யும்போது உரிமையாளர் மற்றும் உதவியாளரும் பதிவு செய்ய வேண்டும். காளைகளின் பதிவு, நிகழ்ச்சிக்கு 3 நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.

எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்று நடத்த அனுமதிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டில் பங்கு பெறும் வீரர்களும் நிகழ்ச்சிக்கு 3 நாட்களுக்கு முன்பதாக பதிவு செய்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை பெற வேண்டும். அது இல்லாவிட்டால் வளாகத்திற்கு செல்ல அனுமதி கிடைக்காது.

வீரர்களும் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சிக்கு 2 நாட்களுக்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளை பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டும். திறந்த வெளி அரங்கத்தில் அதன் அளவிற்கு ஏற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மிகாமல், இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர் அனுமதிக்கப்படுவர்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்துத் துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சிக்கு 2 நாட்களுக்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

வெளியூர் மக்கள், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக காண அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த அரசின் முன் அனுமதி பெற்று, பிராணிகள் வதை தடுப்பு (ஜல்லிக்கட்டு நெறிமுறைகள்) விதிகள் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றுடன் அரசின் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment