குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்!

முப்படைத் தளபதியான  பிபின் ராவத் குன்னூருக்கு அருகே ஹெலிகாப்டரில் சென்ற போது நடந்த கொடுமையான விபத்து பற்றி ஆராய ஏர் மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

விசாரணைக்குழு அறிக்கை வருவதற்கு முன்பு ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் புகைந்து கொண்டிருந்தன.

ரஷ்யத் தயாரிப்பான இந்த ஹெலிகாப்டர் பல சிறப்பு வசதிகளைக் கொண்டது. எளிதில் தீப்பிடிக்காத தன்மை கொண்டது.

இதில் எப்படிக் கோளாறு உருவாகி விபத்து நடந்தது என்பதை உலக நாடுகள் கவனித்துக் கொண்டிருந்த நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விசாரணை அறிக்கை தாக்கல்  செய்யப்பட்டிருக்கிறது.

விபத்து நடந்த அன்று குன்னூர் பகுதியில் நிலவிய பனிமூட்டமான வானிலையே விபத்திற்கான காரணம் என்றும் இனியும் இம்மாதிரியான விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்தும் சொல்லியிருக்கிற அறிக்கை இதுவரை வெளியில் நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

குன்னூரில் விபத்திற்குக் காரணமான ஹெலிகாப்டரை ரஷ்யா உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், விபத்து குறித்துத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிற இந்த அறிக்கை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல எவ்வளறவு நவீன ஹெலிகாப்டருக்கும் பனி சறுக்கும் போலிருக்கிறது.

*

Comments (0)
Add Comment