சிக்கல்கள்தான் நம்மைப் புத்துணர்வு பெறச் செய்யும்!

ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு பண்ணையார். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க.. காட்டில் அங்குமிங்குமாக பாய்ந்து பாய்ந்து வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வந்த வழியைத் தவறவிட்டு விட்டதை உணர்ந்தது.

அப்போது சற்று தூரத்தில் முரட்டுப் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய். புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.

புலி அருகில் வந்தவுடன் ‘ஆஹா… புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே! என்றது நாக்கைச் சுழற்றியபடியே.

அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்தது. “நல்லவேளை! இந்த நாட்டு மிருகத்திடமிருந்து தப்பினோம்” என்றெண்ணி மெதுவாக பதுங்கிப் பின்வாங்கியது.

இந்த சம்பவத்தை மரத்தில் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடம் நிரந்தர நண்பனாக மாறத் திட்டமிட்டது. புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது.

அதனை நாயும் கவனித்து விட்டது. “ஆஹா… வில்லன் கிளம்பிட்டானே!” என்று எண்ணினாலும் இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து மூளையைக் கசக்கியது.

இதனிடையே, புலியிடம் சென்ற குரங்கு நாயின் தந்திரத்தைக் கூறி, “உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டது அந்த நாய்!” என்றது.

கோபம் கொண்ட புலி, “என்னுடன் வா! அந்த நாய் என்ன பாடுபடுகிறது என்பதை ரசித்துப் பார்” என்று உறுமிவிட்டு குரங்கைத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு நாயை நோக்கி விரைந்தது.

குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்தபடியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்தபடியே சொன்னது.

”இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!” என்றது சத்தமாக.

குரங்கு குளோஸ்!

எத்தனை இக்கட்டு வந்தாலும், புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அதிலிருந்து மீண்டு விடலாம் என்பதை அறிவான் புத்திசாலி! சங்கடமான தருணங்களில் எப்போதுமே சாதுர்யம் அவசியம்.

கடலில் வாழும் சிறிய மீன்கள், சுறாவிடம் சிக்காமல் இருக்க எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும். அதுபோல சிக்கல்கள்தான் நம்மை மந்தமான சூழலில் இருந்து புத்துணர்வு சூழலுக்கு மாற்றும்.

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘ஒரு கதை… ஒரு விதை…’ என்ற நூலிலிருந்து…

http://ramkumarsingaram.com

Comments (0)
Add Comment