புதிய காற்றழுத்தத் தாழ்வு: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

– சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (டிச.,17) புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், வரும் 20-ம் தேதி வரை, மீனவர்கள் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“வடகிழக்கு பருவக்காற்றால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று பகல் வரை மிதமான மழை பெய்யும்.

நாளை காலை வரை நிலவரப்படி, தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்; மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 30 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில், நாகையில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது. திருக்குவளை 3; திருப்பூண்டி, கோடியக்கரை 2 மற்றும் திருத்துறைப்பூண்டியில் தலா 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய பூமத்திய ரேகை பகுதியில், இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்.

இதனால், இன்று முதல் 20-ம் தேதி வரை பூமத்திய ரேகை பகுதியில் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும். மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment