குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: பிபின் ராவத் நிலை?

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் (எம்.ஐ.-17 வி-5)  கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

கோவை சூலூரில் இருந்து நீலகிரி ராணுவ விமானப்படைத் தளத்திற்குப் புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர், குன்னூர் காட்டுப்பகுதியில் இருந்த மரங்களில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டரில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். ஏற்கனவே 4 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், பிபின் ராவத் நிலை குறித்து தெரியவில்லை. அவரது மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக நீலகிரி ஆட்சியருடன் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்துமாறு ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குன்னூருக்கு விரைகிறார். சென்னையில் இருந்து மாலை 5 மணி அளவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து குன்னூர் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதை அடுத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு குன்னூர் விரைகிறார்.

இதனிடையே, பிரதமர் மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் குன்னூர் வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Comments (0)
Add Comment