7 பேர் விடுதலை: ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது!

– உச்சநீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, 1991ம் ஆண்டு தமிழகம் வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏழு பேரும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

கடந்த 2018-ல் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூடி தீா்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இத்தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார்.

பேரறிவாளன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீதான ஆளுநரின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தது.

மேலும், ஆளுநர் உரிய காலத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், இன்று (டிசம்பர்-7) நடைபெற்ற விசாரணையின்போது, ‘ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர். ஆனால், ஆளுநர் உரிய நேரத்தில் முடிவெடுக்கவில்லை’ என தமிழக அரசு வாதிட்டது.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், “பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்க முடியாத விஷயம்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் இனியும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கேட்கக் கூடாது என்றும் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Comments (0)
Add Comment