அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ மாதிரி தேர்வு நடத்த முடிவு!

– பள்ளிக் கல்வித்துறை திட்டம்

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர, நீட் நுழைவுத் தேர்விலும்; ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வுக்கு, தமிழக அரசு பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஆனாலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

இந்த முறை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்தவும், நீட் தேர்வுக்கான வினா வங்கி வழங்கவும், பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

இதற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வழியே ஏற்பாடுகள் துவங்கி உள்ளன.

வேலுார், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நீட் மாதிரி தேர்வு மற்றும் வினா வங்கி தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதஇட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் தி.மு.க., ஆட்சியிலும் தொடர்கிறது.

அந்த வகையில், நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள தேவையான உதவிகளை, தமிழக அரசு அதிகரித்து வருவதால், தமிழக அரசின் நீட் எதிர்ப்பு, வருங்காலங்களில் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment