அடுத்தடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; கனமழைக்கு எச்சரிக்கை!

29.11.2021  3 : 50 P.M

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை (நவ.,30) உருவாகும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்,

மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1-ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (நவ.,29) விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும்,

மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,

வட கடலோர மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை முதல் மழை குறையத் துவங்கும். வங்கக்கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்.

நவம்பர் 30-ல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் ஒன்றாம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணிநேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணிநேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 17 செ.மீ., சிவலோகம் (கன்னியாகுமரி) 16 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.

இதேபோல் நவம்பர் 29-ல் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

நவம்பர் 30-ல் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து 48 மணிநேரத்திற்கு மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.

இதன்காரணமாக, தெற்கு அந்தமான் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

நவம்பர் 29-ல் தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment