உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கையை வெளியிடுங்கள்!

29.11.2021   4 : 30 P.M

ராகுல்காந்தி வலியுறுத்தல்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான அரசின் எண்ணிக்கை தவறானது. உயிரிழந்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு தர வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் குடும்பக் கதைகள் உண்மையானவை. அவர்களின் வலி, துன்பம் உண்மை. ஆனால் அரசின் புள்ளிவிவரம் தவறு. அரசு உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அதோடு, கொரோனா கால அனுபவங்களைச் சொல்லும் வீடியோக்களையும் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.

அதில், “குஜராத் மாதிரி பற்றி நிறைய விவாதிக்கப்படுகிறது. ஆனால் நாம் பேசிய அனைத்து குடும்பங்களுமே கொரோனா காலத்தில் தாங்கள் உணவு, படுக்கை, ஆக்சிஜன், வென்டிலேட்டர் இல்லாமல் அவதியுற்றதாக தெரிவித்தன.

கொரோனாவால் குஜராத்தில் மட்டுமே 3 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால் அந்த மாநில அரசு 10 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவால் இறந்ததாக கூறுகிறது” எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment