3 வேளாண் சட்டங்களும் வாபஸ்!

– விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட பிரதமர் மோடி வேண்டுகோள்

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அவர் இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இந்த உரையில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த உரையின்போது பேசிய அவர், “நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தோம்.

சிறு விவசாயிகளை முன்னேற்றவே, அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்தச் சட்டங்கள் கொண்டு வந்தோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே இந்தச் சட்டம் கொண்டு வந்தோம்.

ஆனால் சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டது. இது குறித்து புரிய வைக்க பல முயற்சிகள் எடுத்தோம். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனாலும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.

இதனால் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுகிறோம். வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்தச் சட்டம் திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போராடும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை விவசாய அமைப்பினர் வரவேற்றுள்ளனர். இதற்காக முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர்சிங் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment