சுகப்பிரசவத்தை ஊக்கப்படுத்த வேண்டும்!

– மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், 11-ம் தேதி 24 மணி நேரத்தில் 68 பிரசவங்கள் நடந்தன. இதில், 60 சதவீதம் சுகப் பிரசவம்; 40 சதவீதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர், “மாநிலம் முழுதும் அரசு மருத்துவமனைகளில், 65 சதவீதம் பிரசவம் நடைபெறுகிறது; 35 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர்.

அரசு மருத்துவமனைகளில், 65 சதவீதமாக உள்ள சுகப் பிரசவம், தனியார் மருத்துவமனைகளில் 37 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வெளிநாடுகளில் 80 சதவீதம் சுகப் பிரசவம்; 20 சதவீதம் மட்டுமே சிசேரியன். தமிழகத்தில் முன்பெல்லாம், 100 சதவீதம் சுகப் பிரசவமாக இருந்தது. தற்போது, சுகப் பிரசவம் குறைந்து சிசேரியன் சதவீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பிட்ட தேதிகளில், குழந்தையை வெளியில் எடுப்பது தான் இதற்கு முதற்காரணமாக உள்ளது. இவற்றை ஊக்கப்படுத்தக் கூடாது என மருத்துவர்களிடம் அறிவுறுத்தி உள்ளோம்.

தேவையில்லாத சிசேரியன் தவிர்க்குமாறு, தனியார் மருத்துவமனைகளுக்குக் கடிதம் எழுத உள்ளோம்” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment