நேர்மறை எண்ணங்களே வெற்றிக்கான வழி வகுக்கும்!

இன்றைய போட்டி உலகில் வெற்றி மீது நமக்கு பெரிய விருப்பம் இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றியையே முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறோம்.

இதைத் தவிர்க்க முடியாதுதான். சூறாவளியாகச் சுழன்று ஓடும் நீரோட்டம் போன்ற இந்த வாழ்க்கைப் பயணத்தில், மற்றவர்களை விட நாம் ஓரிரு படிகளாவது கூடுதலாக முன்னேற வேண்டியது அவசியமாகும்.

ஒரு ஜப்பானியரும் ஒரு அமெரிக்கரும் காட்டிற்குச் சென்று வேட்டையாட விரும்பினார்கள், அதற்காக அவ்விருவரும் அருகிலுள்ள அடர்ந்த காட்டிற்குள் சென்றனர்.

அந்த அடர்ந்த காட்டில் அவர்களிருவரும் சிறுசிறு விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிக் கொண்டே சென்று கொண்டிருந்தபோது, அவர்களுடைய துப்பாக்கியில் இருந்த தோட்டாக்கள் தீர்ந்து விட்டதை உணர்ந்தார்கள்…

அந்தச் சூழலில் சட்டென அவர்களுக்கு அருகில் சிங்கம் ஒன்று கர்ஜிக்கும் ஒலியைக் கேட்டனர். அதனைத் தொடர்ந்து இந்நிலையில் தங்களால் அந்த சிங்கத்தை எதிர் கொள்ள இயலாது என தெரிந்து கொண்டார்கள். உடன் இருவரும் அந்த அடர்ந்த காட்டினை விட்டு வெளியேறுவதற்காக வேகமாக ஓட ஆரம்பித்தனர்.

ஆனால்!, அவ்விருவரில் ஜப்பானியர் மட்டும் தன் ஓட்டத்தை நிறுத்தி அவரது காலில் அணிந்திருந்த முழுக் காலணிகளை கழற்றி கைகளில் எடுத்துக் கொண்டார்.

இதனைக் கண்ட அமெரிக்கர், “நீங்கள் என்ன இப்போது செய்கிறீர்கள்? சீக்கிரம் வாருங்கள், நாமிருவரும் இந்தக் காட்டினை விட்டு வெளியேறி நம்முடைய மகிழுந்து இருக்குமிடத்திற்கு விரைவாக ஓடிவிடுவோம்” எனக் கூறினார்.

அதற்கு ஜப்பானியர், இந்த முழுக்காலணிகளானவை வேகமாக ஓடுவதற்கு இடைஞ்சலாக இருக்கின்றன, அதனால் இந்த முழுக்காலணிகளை கழற்றி விட்டேன்.

இப்போது பாருங்கள் நம்மில் யார் முதலில் மகிழுந்திற்குச் செல்கின்றோம் என்பதை. எனக்கூறி கொண்டு மகிழ்வுந்து இருக்கும் இடம் நோக்கி பறந்தோடி முதலில் சென்றார்.

ஆம்!, நமது இலக்கை நாம் அடைந்து விடுவோம் என்று எப்போதும் நேர்மறையாகச் சிந்திப்பவர்கள் உறுதியாக அந்த இலக்கை அடைந்து விடுவர்.

ஏனெனில், அவர்களது நேர்மறை எண்ணம் அவர்களுக்கு அளிக்கும் உந்துதலும், ஆற்றலும், இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும். நம்மால் முடியாது என்ற எதிர்மறையாக எண்ணும் போது அந்த எண்ணமே நம்மை வீழ்த்தி விடும்.

இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய வாழ்க்கைப் பயணமானது மிகவும் கடுமையானது.

வெற்றி என்பது குருட்டு நம்பிக்கையால் அமையாது. அது கடும் உழைப்பால்தான் சாத்தியப்படும்.

வெற்றி பெறவேண்டும் என்னும் தாகம் உங்கள் மனத்தில் இருந்துகொண்டிருந்தால் வெற்றி பெறுவது நிச்சயம்.

– நன்றி முகநூல் பதிவு

Comments (0)
Add Comment