வாழ்க்கையை உற்சாகத்தோடு வாழ முற்படுங்கள்!

ஒரு பெண் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார். ஒரு ஆண் அதே தூரத்தைக் கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டார்.

இவர்களில் யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக நமது பதில் அந்தப் பெண் என்றுதான் வரும்.

ஆனால், இப்பொழுது அந்தப் பெண் நன்கு பண்படுத்தப்பட்ட சாலையில் அந்த தூரத்தைக் கடந்தார் என்றும், அந்த ஆண் கரடுமுரடான பாதையில் அதைக் கடந்தார் என்றும், நான் சொன்னால் இப்பொழுது உங்களுடைய பதில் மாறும் அல்லவா?

ஆம் நிச்சயமாக இப்பொழுது அந்த ஆண் தான் வேகமானவர் என்று சொல்லுவோம்.

மறுபடி இப்பொழுது அந்தப் பெண்ணுக்கு 50 வயது என்றும் அந்த ஆணுக்கு 25 வயது என்றும் கூடுதல் தகவலை நான் கொடுக்கும் பொழுது. உங்களுடைய பதில் மறுபடி மாறும் அல்லவா?

ஆமாம் இப்போது அந்தப் பெண் தான் வேகமானவர் என்று சொல்வோம்.

மேலும் அந்த ஆண் அவருடைய எடை 140 கிலோ என்றும் அந்தப் பெண்ணுடைய எடை 65 கிலோ என்று நான் சொல்லும்போது மீண்டும் இந்த பதில் மாறும்.

இப்பொழுது அந்த ஆண் தான் வேகமானவர் என்று சொல்லுவோம்.

இதேபோல அந்த ஆண் பற்றியும் அந்தப் பெண் பற்றியும் நம்முடைய இந்த முடிவானது அவர்களைப் பற்றிய அதிக தகவல்கள், கூடுதல் தகவல்கள கிடைக்கக் கிடைக்க மாறிக்கொண்டே இருக்கும்.

இதுதான் வாழ்க்கையிலும். நாம் ஒவ்வொருவரைப் பற்றியும் மிக வேகமாக நம்முடைய அபிப்பிராயங்களை உருவாக்குகிறோம். அவர்களோடும், அவர்களின் செயல்பாடுகளோடும் நம்மை ஒப்பிட தொடங்குகின்றோம்.

இதனால் நாம் நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்கின்றோம்.

வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாகும். ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் வேறுபட்டதாகும்.

ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் அறிவும், பொருளும் வேறாக இருக்கலாம்.

ஒவ்வொருவரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வேறாக இருக்கலாம். அதற்கான தீர்வுகள் கூட வேறாக இருக்கலாம். எனவே வாழ்க்கை என்பது வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும்.

அதை தேவையில்லாமல் மற்றவர்களோடு ஒப்பிட்டு வீணாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் தான் உயர்ந்தவர்கள். நீங்கள் தான் சிறந்தவர்கள். உங்களுடைய முழு சக்தியையும் ஆற்றலையும் பிரயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுடைய சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு முடிவுகளை எடுத்து முன்னேறுங்கள். எப்போதும்
ஆரோக்கியமாக இருங்கள். அமைதியாக இருங்கள். திருப்தி அடைந்தவராக இருங்கள்.  புன்னகையைப் படர விடுங்கள். மனம்விட்டு சிரிக்கப் பழகுங்கள்.

சமுதாயத்திற்கும், இந்த தேசத்திற்கும் ஏதாவது சேவை புரிந்து கொண்டே இருங்கள்.

– நன்றி முகநூல் பதிவு.

Comments (0)
Add Comment