பாலைவனத்தில் கிணறு தோண்டும் குதிரைகள்!

உலகின் பழைமையான வரலாற்றின் நெடுகிலும் மனித இனம் மட்டுமே குடிநீருக்காகக் கிணறுகளைத் தோண்டிய கதைகள் ஏராளம்.

நவீன கால ஆய்வுகளில் குதிரைகளும் கழுதைகளும் தாகத்தைத் தணிக்கக் கிணறு தோண்டும் உண்மை தெரிய வந்துள்ளது.

காட்டுயிர்கள் கிணறு தோண்டுவது பற்றியம் ஆய்வுக்கட்டுரை சர்வதேச அறிவியல் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

பாலைவனத்தில் வாழும் குதிரைகளும் கழுதைகளும் குடிநீர்த் தேவைக்காகப் பூமியில் ஆறு அடியில் குழிகளைத் தோண்டுவது கண்டறியப்பட்டுள்ளது.

கிணற்றில் ஊறும் நீரினை கரடிகள், ஆந்தைகள், பறவைகள் மற்றும் பல காட்டுயிர்களும் அருந்துகின்றன.

பல நூற்றாண்டுகளாகக் குதிரைகளும் கழுதைகளும் காடுகளில் வாழ்ந்து வருகின்றன. அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அதிலொரு பெருங்கூட்டம் அதிக அளவில் உள்ளன.

“குதிரைகள் தோண்டும் கிணறுகள் விலங்குகளின் மற்ற செயல்பாடுகளுக்கான இடங்களாகவும் மாறி விடுகின்றன” என்கிறார் டென்மார்க் நாட்டில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆய்வாளரான எரிக் லுன்ட்கிரன்.

மேற்கு அரிசோனாவில் சோனாரான் பாலைவனத்தில் நான்கு இடங்களில் தொடர்ந்து மூன்று கோடைக் காலங்களில் வனவிலங்குகளின் நடவடிக்கைகளை ஆய்வு செய்துள்ளனர்.

அதேபோல கலிபோர்னியாவில் மோஜாவே பாலைவனத்தின் ஆற்றுப் படுகைகளிலும் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது 4 இடங்களில் குதிரைகளும் கழுதைகளும் தனித்தனியாகக் கிணறுகள் தோண்டியதை ஆய்வாளர்கள் அறிந்துகொண்டனர். தன்னுடைய முன்னங்கால்களால் குழிகளைத் தோண்டி மண்ணை அப்புறப்படுத்தியுள்ளன.

பாலைவனத்தில் காணப்பட்ட கிணறுகளில் காடுகளில் வாழும் 57 வகையான விலங்கினங்கள் நீர் அருந்தியதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

அதாவது பலவகையான பறவைகள், பாலூட்டிகள், மான்கள், கரடிகள், காட்டு ஆடுகள் உள்படப் பல விலங்குகள் தாகம் தணித்திருக்கின்றன.

முக்கியமான சில பகுதிகளில் கேமராக்களை வைத்து ஆய்வாளர்கள் கண்காணித்தனர். இந்தக் கிணறுகளின் அருகில் காணப்பட்ட விலங்கினங்கள் மற்றவற்றைவிட 64 சதவீதம் அளவுக்கு வளமாக இருந்துள்ளன.

குதிரைகள் தோண்டிய கிணறுகளுக்கு அருகில் இந்த திறந்தவெளி நீர்நிலைகளையும் ஆய்வாளர்கள் வரைபடமாக்கினர். அந்தக் கிணறுகளுக்கு அருகில் சில சிறு தாவரங்கள் வளர்ந்திருந்தன.

பாலைவனத்தில் அருகிவரும் அரிய மரங்களுக்கான நாற்றங்காலாக அவை செயல்படுகின்றன.

“பாலைவனத்தில் குதிரைகள் மற்றும் கழுதைகள் தோண்டிய கிணற்றில் எவ்வளவு தண்ணீர் விநியோகிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்”

– என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபடாத சுற்றுச்சூழலியல் பேராசிரியர் மைக்கேல் போகன்.

இந்தக் கிணறுகளால் திடீரென ஏற்படும் காட்டுத்தீ தவிர்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லேண்ட், தெற்கு ஆஸ்திரேலியா, கனடாவின் சாபெல் தீவு ஆகியவற்றில் வாழும் குதிரைகள், கழுதைகளிடம் கிணறு தோண்டும் பண்பு இருக்கிறது.

  • பா. மகிழ்மதி
Comments (0)
Add Comment