தேவை இருக்குமிடத்தில் காணப்படும் தூய்மை நேர்மையானது!

சென்னை, திருவொற்றியூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கணேஷ் ராமன். தனியார்  நிறுவன ஊழியர். கணேஷ், கடந்த மார்ச் மாதம் 100 கிராம் எடையுள்ள தங்க நாணயத்தை வாங்கி, மனைவி பயன்படுத்திய பழைய வளையல் கவரில் போட்டு, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்தார்.

இது தெரியாத அவரது மனைவி, வீட்டை சுத்தம் செய்த போது கண்ணில் பட்ட அந்தக் கவரை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார்.

வீட்டிற்கு வந்த கணேஷ், வளையல் கவர் குப்பைத் தொட்டியில் போட்ட தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே சாத்தாங்காடு காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

இதையடுத்து, துாய்மைப் பணி மேற்கொள்ளும் ராம்கி, தனியார் ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர் செந்தமிழ்ச் செல்வன் ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, குப்பையைத் தரம்பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேரி என்ற ஊழியர், தங்க நாணயத்தை மீட்டு, மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

துாய்மைப் பணி அதிகாரிகள், தங்க நாணயத்தை சாத்தாங்காடு குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ்வரியிடம் ஒப்படைத்தனர்.

இதன் மதிப்பு, 4.5 லட்சம் ரூபாய் எனத் தெரிகிறது.

உடனடியாக கணேசையும் அவரது மனைவியையும் வரவழைத்து, தங்க நாணயத்தை மீட்டுக் கொடுத்த துாய்மை பணியாளர்கள் கையாலேயே அவர்களிடம் காவல் துறையினர் வழங்கினர்.

குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயத்தை மீட்டு, காவல்துறையிடம் ஒப்படைத்த துாய்மைப் பணியாளர் மேரி மற்றும் சக பணியார்களுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, 100 கிராம் தங்க நாணயத்தை காவல் துறையிடம் ஒப்படைத்த துப்புரவுப் பணியாளர் மேரியின் நேர்மையைப் பாராட்டி, தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் கைப்பட பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள அந்தப் பாராட்டுக் கடிதத்தில், “தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது.

குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக உங்களிடம் இருக்கும் தங்கமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது.

நீங்கள் தூய்மைப் பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர்.

உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

குறுக்கு வழிகளெல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்று. வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment