அச்சுறுத்தல்களைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்!

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் காணொலிக் காட்சி வாயிலாக  பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், “நாடு சுதந்திரம் பெற்ற பின், அளவான போர் திறன்களை உடைய சிறிய படையாக இருந்த நம் ராணுவம், இன்றைக்கு நவீன போர்க் கருவிகளையுடைய, மிக வலுவான படையாக மாறியுள்ளது.

போர்களின் தன்மைகளில், 20ம் நுாற்றாண்டில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளோம். பாதுகாப்பு விவகாரங்களில் பல சவால்களைச் சந்தித்து வருகிறோம்.

உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த ராணுவம் சந்தித்து வரும் சவால்களைவிட, நம் ராணுவம் அதிக சவால்களை சந்தித்து வருகிறது.

சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, நம் ராணுவம் தயாராக இருக்க வேண்டும். அதேபோல் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீனா ஆதிக்கம் செலுத்த கடுமையான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. எனவே, போர்த் திறன்களின் மாற்றத்தை உள்வாங்கி, அதைத் திறமையாகச் செயல்படுத்திய மற்ற நாடுகளின் படிப்பினைகளை, நாம் தெளிவாக கற்க வேண்டும்” எனக் கூறினார்.

05.03.2021 05 : 20 P.M.

Comments (0)
Add Comment