திட்டமிட்டுச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!

ஒரு மனிதன் வெற்றிப் பாதையை அடைய தன்னம்பிக்கையும் திட்டமிடுதலும் அவசியம்.

ஒரு செயலை சிறப்பாக செய்வதற்குமுன் நேர்த்தியாக  திட்டமிட்டால் அந்தச் செயலின் மூலம் நம் வாழ்வை சிறப்பானதாக மாற்றிக்  கொள்ள முடியும் என்பதற்கு சான்றாக இந்தக் கதை…

ஒரு நகரத்தில் சற்று வித்தியாசமான சட்டம் அமலில் இருந்தது. அதன்படி அந்நகரத்திற்கு யார் வேண்டுமானாலும் மன்னனாக வரமுடியும். ஆனால், ஐந்தாண்டுகள் பதவிக் காலம் முடிந்ததும் அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும்.

இந்தச் சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனுக்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமல் இருந்ததால், அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் “எப்படி இருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!” என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் “இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!” தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், “மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!”

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் “மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?”

“தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!”

“அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?”

“தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!”

“பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?”

“அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேறு இடங்களுக்கு துரத்தினார்கள். மிகவும் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள், காய்கறிகள் விளைகின்றன.

அடுத்த ஆண்டில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

அதன்பின்னர் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!” என்றான் மன்னன்.

இந்தக் கதையில் சரியான திட்டமிடல் தான் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழ வேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழ வேண்டும் என்ற இலக்கை அடைய வைத்தது.

கதையில் மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டும் என்றால், நமக்குத் தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாக உழைக்க வேண்டும்.

இப்போது, நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்! கடுமையாக உழைப்பவனுக்கு அவனது உழைப்பு தான் உயர்வைத் தருகிறது. ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அந்தவகையில் இப்போது நாம் செய்வது – செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் பலமுறை யோசித்து எது நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செய்தால் வெற்றி நிச்சயம்.

– நன்றி: முகநூல் பதிவு

19.02.2021  05 : 25 P.M

Comments (0)
Add Comment