எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ…!

நினைவில் நிற்கும் வரிகள்:

சித்திரச் சோலைகளே!
உமை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே

தாமரை பூத்த தடாகங்களே!
உமைத் தந்த அக்காலத்திலே
எங்கள் தூய்மைச் சகோதரர்
தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ ஞாலத்திலே!
                                                    (சித்திரை…)

மாமிகு பாதைகளே!
உமை இப்பெரு வையமெலாம் வகுத்தார்
அவர் ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே!
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ?
நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?

கீர்த்திகொள் போகப்பொருட்புவியே!
உன்றன் கீழிருக்கும் கடைக்கால்
எங்கள் சீர்த்தொழிலாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள் தோல்!

நீர் கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே!
உம்மைச் சாரும் புவிப்பொருள் தந்ததெவை?
தொழிலாளார் தடக்கைகளே!

தாரணியே! தொழிலாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ?

பசி தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ?
(சித்திரை…)

எலிகள் புசிக்க எலாம்கொடுத்தே
சிங்க ஏறுகள் ஏங்கிடுமோ?
இனிப்புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே
பெரும் புதரினில் தூங்கிடுமோ?

கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார்
இனிக்கெஞ்சும் உத்தேசமில்லை
சொந்த வலிவுடையார் இன்ப வாழ்வுடையார்
இந்த வார்த்தைக்கு மோசமில்லை

நித்தம் திருத்திய நேர்மையினால்
மிகு நெல்விளை நன்னிலமே!
உனக்கெத்தனை மாந்தர்கள்
நெற்றி வியர்வை இறைத்தனர் காண்கிலமே

                                                              (சித்திரை…)

  • 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் பாரதிதாசன்.

#NaanYenPirandhen #Bharathidasan #சித்திரச் சோலைகளே #mgr #chithiraisolaigalelyrics #எம்ஜிஆர் #பாரதிதாசன் #நான்ஏன்பிறந்தேன் 

Comments (0)
Add Comment