தலைவனும் ஒன்றுதான்; தொண்டனும் ஒன்றுதான்!

கேள்வி: பணத்தால் மனிதன் ஆக்கப்படுகிறானா, அல்லது மனிதனால் பணம் ஆக்கப்படுகிறதா?

எம்.ஜி.ஆர்: நோட்டுகளும், நாணயங்களும் எங்கே யாரால் உருவாக்கப்படுகின்றன என்பது இன்னமுமா தெரியவில்லை? போகட்டும், அடிக்கடி கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன என்று செய்திகள் வருகின்றதே அதைக் கூடவா பார்த்ததில்லை.

கேள்வி: தங்களைப் போல ஒரு சிறந்த நடிகராக வேண்டும் என்றால் என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று விளக்க முடியுமா?

எம்.ஜி.ஆர்: என்னைப் போல நடிகனாக வேண்டுமென்றால் அதற்கு தகுதி விளக்கம் கூற எனக்குத் தகுதி இல்லை. ஆனால் இயற்கையை செயற்கையின் வழியாகக் காட்டுவதற்கு திறமை வேண்டும். அதாவது பேச்சு, முகபாவம், அங்க அசைவு முதலியவற்றை ஆதாரமாகக் கொண்டு தன் மனத்தில் தோன்றும் எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்.

கேள்வி: தாங்கள் நடிக்கும் கதையில், நீங்கள் சொல்லும் மாற்றங்களைச் செய்தால் தான் நடிப்பேன் என்று கூறுவதாக சொல்கிறார்களே? அது உண்மையா?

எம்.ஜி.ஆர்: அப்படிச் சொன்னால் அது தவறு என்று நீங்கள் கருதுகிறீர்களா?

கேள்வி: ரசிகன், தொண்டன் இதில் யாரை அதிகம் விரும்புவீர்கள்?

எம்.ஜி.ஆர்: எந்தக் கொள்கையின் மீதும் ரசிப்புத் தன்மை கொள்ளாதவர்கள் தொண்டர்களாக ஆக முடியாது. உண்மையான ரசிப்பு என்பது உணர்விலிருந்து வர வேண்டியது. அப்படிப்பட்ட ரசிகனுடைய உள்ளத்தில் ஏற்றத்தாழ்வு என்ற நினைப்புக்கே இடமிருக்காது. அத்தகைய உள்ளத்திற்கு தலைவனும் ஒன்றுதான். தொண்டனும் ஒன்று தான். முடிவு இப்படியிருக்க, நாம் மட்டும் தொண்டனையும் ரசிகனையும் எப்படிப் பிரித்துப் பார்ப்பது.

16.02.2021 10 : 55 A.M

#எம்ஜிஆர் #mgr #ரசிகன் #தொண்டன்

Comments (0)
Add Comment