உங்கள் டேட்டாவை அறிய ஓர் இணையதளம்!

இணையவெளியில் கணந்தோறும் நிகழும் மாற்றங்களைப் பற்றிய நவீனத் தொழில்நுட்பத் தகவல்களை எளியவர்களுக்கும் புரியும் தமிழில் எழுதி வருபவர் சைபர் சிம்மன். இணைய நிறுவனங்கள் சேகரித்து வைக்கும் தரவுகளைப் பயனாளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதியான இணையதளம் பற்றிய தகவல்களை அவர் வழங்குகிறார்.

பிரைவசி பிரச்சனையில் நிறுவனங்களை விமர்சிப்பதோடு நின்று விடாமல், பயனாளிகள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

அந்த வகையில் பயனாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளமாக ‘ஜஸ்ட் கெட் மை டேட்டா’ (https://justgetmydata.com/) தளம் அமைகிறது.

இணைய நிறுவனங்கள் சேகரித்து வைத்திருக்கும் தங்களைப் பற்றிய தரவுகளைப் பயனாளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்தத் தளம் வழிகாட்டுகிறது.

ஆனால், இந்தத் தளத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை. இது ஒரு திரட்டி. அதாவது, தொகுத்தளிக்கும் சேவை. கூகுள், ஆப்பிள், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், மைக்ரோசாப்ட், ரெட்டிட் உள்ளிட்ட இணைய நிறுவனங்களின் இணையதளங்களில் இருந்து, அவை சேகரித்து வைத்துள்ள பயனாளிகள், தரவுகளை எப்படி தரவிறக்கம் செய்வது என அடையாளம் காட்டுகிறது.

உங்களுக்குத் தேவையான நிறுவன பெயர் மீது கிளிக் செய்தால், அந்நிறுவன இணையதளத்தில் இருந்து, உங்கள் தகவல்களை எப்படி தரவிறக்கம் செய்வது என வழிகாட்டப்படும்.

குறிப்பிட்ட அந்தத் தளத்திலேயே, இந்தத் தகவலை ஒருவர் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், நிறுவனங்களும் இதை பளிச்செனப் பார்வையில் தென்படும் வகையில் வைப்பதில்லை. பயனாளிகளும் இதைத் தேடி அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

எனவேதான், இந்தத் தேடலைப் பயனாளிகள் சார்பில் மேற்கொண்டு, ஒவ்வொரு நிறுவனத்தின் தளத்திலும், தரவுகளை எப்படி தரவிறக்கம் செய்வது எனக் கண்டறிந்து பட்டியலிடும் பணியை  அந்தத் தளம் செய்கிறது.

தகவல்களைத் திரட்டித் தருவதோடு நின்றுவிடாமல் குறிப்பிட்ட இணையதளங்களில், தரவுகளைப் பெறுவது எத்தனை கடினமானது அல்லது எளிதானது என்பதை உணர்த்தும் வகையில், சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் அந்தத் தகவலைச் சுட்டிக் காட்டுகிறது. பச்சை நிறம் எனில், தகவல்களை எளிதாகப் பெறலாம் எனப் பொருள். சிவப்பு எனில் மிகவும் கடினம் எனப் பொருள்.

கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள்மீது பயனாளிகள் தகவல்களைத் திரட்டி அவற்றை விளம்பர நோக்கில் பயன்படுத்துவது தொடர்பாகக் கடுமையான குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் இருக்கின்றன.

ஆனால் இப்படித் திரட்டப்படும் தகவல்கள் குறித்து பயனாளிகள் அறிந்துகொள்ளவும் இந்நிறுவனங்கள் வழி செய்கின்றன. இந்தத் தகவல் சேகரிப்பை ஓரளவு கட்டுப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பளிக்கின்றன.

ஆனால் எத்தனை இணையவாசிகள் இந்த வாய்ப்புகளை அறிந்திருக்கின்றனர்? அவர்களில் எத்தனை பேர் இதைப் பயன்படுத்துகின்றனர்? எனவேதான் பயனாளிகள் தரப்பில் இதுதொடர்பாக விழிப்புணர்வு தேவை. இந்தத் தளம் அதற்கான முதல் புள்ளியாக இருக்கும்” என்று விளக்கம் தருகிறார் சைபர் சிம்மன்.

– தான்யா

04.02.2021  11 : 55 A.M

Comments (0)
Add Comment