அண்ணா வாழ்ந்த விதம் பற்றி எம்.ஜி.ஆர்.!

அறிஞர் அண்ணா அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தபின் 1968-ல் சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த நேரம்.

காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த அனந்தநாயகி கேள்வி நேரத்தின்போது அண்ணா அவர்களை நோக்கி, “முதல்வர் அவர்களே, நீங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியதில் எவ்வளவு பணம் செலவானது. அது உங்கள் சொந்தப் பணமா? அல்லது அரசு பணமா? அல்லது உங்கள் கட்சி செலவா?” என்று கேட்டார்.

அதற்கு அண்ணா அவர்கள் சபையைச் சுற்றிப் பார்த்து, “உங்களுடைய இந்தக் கேள்விக்கு நாளைக்கு நான் பதில் சொல்கிறேன்” என்றவுடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஒரு மாதிரியாக சிரித்தனர்.

மறுநாள் சட்டப்பேரவைக் கூடியதும் அதே கேள்வி நேரத்தில், “நேற்று நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்” என்று அவர் மீண்டும் கேட்டார்.

அண்ணா அவர்கள், “எனது சிகிச்சைக்கான முழு செலவையும் நானும் கொடுக்கவில்லை. தமிழக அரசும் கொடுக்கவில்லை. எங்கள் கட்சியும் ஏற்கவில்லை.

செலவான தொகை ஒரு லட்சத்து இருபத்து ஐந்தாயிரம் ரூபாய். அந்தத் தொகை மொத்தமும் இங்கே, இதோ சட்டமன்ற உறுப்பினராக அமர்ந்திருக்கிற என் அன்புத் தம்பி எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், அவரின் உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை, எனக்காக, என் சிகிச்சைக்காக அவரே ஏற்றுக்கொண்டு பணம் செலுத்திய ஆதாரம் இதோ.

நேற்று அவர் அவைக்கு வரவில்லை. அவர் முன்னால் இந்த விளக்கத்தைச் சொல்ல வேண்டும் என்று எண்ணியே நேற்று நான் பதில் சொல்லவில்லை” என்றவுடன் சட்டமன்ற அவையில் எழுந்த கரவொலி கட்டடம் தாண்டிக் கேட்டது.

அண்ணா அவர்களுக்கான சிகிச்சை தொகையை எம்.ஜி.ஆர் ஏற்றுக் கொண்டதாக ஒரு நாளும், ஒரு இடத்தில் கூட அவர் சொன்னதில்லை. அண்ணா அவர்கள் சொன்ன பிறகே இந்த உண்மை நாட்டுக்குத் தெரிந்தது.

முதல்வராகும் வரையில் அண்ணாவுக்கு வங்கிக் கணக்கே கிடையாது. அவரது சம்பளம், பயணப்படி காசோலையை மாற்றுவதற்காக, முதல்வர் அலுவலக ஊழியரான பொ.க.சாமிநாதன் தான் அண்ணாவுக்கு வங்கிக் கணக்கு ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார்.

மறையும்போது அண்ணாவின் வங்கிக் கணக்கின் இருப்பு வெறும் 5000 ரூபாய்.

பல ஆயிரங்கள் கடன் இருந்தது. எஸ்.எஸ்.ராஜேந்திரன் அந்தக் கடன்களை அடைக்க முற்பட்டபோது தடுத்தார் எம்.ஜி.ஆர்.

“நாம் யாரோ ஒருவராக இந்தக் கடனை அடைக்கக் கூடாது. இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். அண்ணா குடும்பத்துக்கு என்று நிதி வசூலிப்போம். அதிலிருந்து கடன்களை அடைப்போம்” என்றார் எம்.ஜி.ஆர்.

அதன்படியே நிதி வசூலித்துக் கடன்களை அடைத்தது போக, மீதி தொகை ராணி அண்ணாதுரையிடம் ஒப்படைக்கப்பட்டது.

-‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற நூலில் கே.கே.மகேஷ் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

-நன்றி: இந்து தமிழ் திசை

03.12.2021  11 : 40 A.M

Comments (0)
Add Comment