தமிழக சாலைப் பணிகளுக்கு ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு!

2021-22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3-வது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் முழுக்கத்துக்கு இடையே இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

உரையின்போது பேசிய அவர், “பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியா தயாராக உள்ளது. சர்வதேச பொருளாதாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் என்ற கொள்கையில் உற்பத்தி உயர்ந்துள்ளது.

கொரோனா கால ஊரடங்கு பாதிப்புக்கு இடையே பட்ஜெட்டை தயாரித்துள்ளோம். கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மக்களுக்காக தேவையானவற்றை மத்திய அரசு வழங்கியுள்ளது.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.27 லட்சம் கோடி மதிப்புள்ள அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். மேலும் பல தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்” எனக் கூறினார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்

*கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஜி.டி.பி.யில் 13 % ஒதுக்கப்பட்டுள்ளது

*நாட்டின் பொருளாதார சரிவுக்கு கொரோனா பாதிப்பே காரணம்; பொருளாதாரத்தை மீட்டெடுக்க தற்போதைய பட்ஜெட் உதவும்

*ரூ.2.87 லட்சம் கோடி செலவில் குடிநீர் வசதியை மேம்படுத்த புதிய திட்டம்; நகர்புற சுகாதாரத்தை மேம்படுத்த ரூ.1.41 லட்சம் கோடியில் புதிய திட்டம்

*கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி செலவிடப்படும். தேவைப்பட்டால் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும்.

* நாடு முழுவதும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 7,400 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன

* சுகாதாரத்திற்கான செலவினம் 137 அதிகரிக்கப்பட்டுள்ளது

*20 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள வாகனங்களை அளிப்பதற்கான தன்னார்வ அடிப்படையிலான திட்டம் செயல்படுத்தப்படும்

*அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டம் ரூ.5 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படும்

*அடுத்த 3 ஆண்டுகளில் 7 இடங்களில் மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படும்

*தமிழ்நாட்டில் மதுரை – கொல்லம் இடையே பொருளாதாரச் சாலை அமைக்கப்படும். பொருளாதாரச் சாலைகளுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு தொடங்கும். ரூ.1.03 லட்சம் கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்.

*நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு; உற்பத்தித்துறை வளர்ச்சியில் இரட்டை இலக்கை அடைய நடவடிக்கை!

*தமிழகத்தில் 3,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்படும்

*நாட்டில் மாசுபாட்டைத் தவிர்க்க நகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 அறிமுகம்; நகர்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும்

*உள்கட்டமைப்பு வசதிக்கு 2021-22 நிதியாண்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு

*மேலும் பல விமான நிலையங்களில் பராமரிப்புப் பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்

*நாடு முழுவதும் ஊட்டச்சத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்; நாட்டில் 116 மாவட்டங்களில் இரண்டாம் ஊட்டச்சத்து இயக்கம் செயல்படுத்தப்படும்

*சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு

*பெருநகரங்களை தொடர்ந்து இரண்டாம் கட்ட நகரங்களிலும் குறைந்த கட்டணத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்

*சுகாதாரத் துறைக்கு ரூ.2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு; 17,000 கிராமப்புற மற்றும் 11,000 நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்கப்படும்

*கன்னியாகுமரி – கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலைகள் அமைக்கப்படும்

*ரயில்வே திட்டங்களுக்காக ரூ.1.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

*குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் மேலும் 100 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்; உஜ்வாலா திட்டத்தின் கீழ் இதுவரை 8 கோடி பேருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது

*மின் உற்பத்தி மற்றும் விநியோகிக்கும் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக ரூ.3 லட்சம் கோடியில் புதிய திட்டம்

*காப்பீட்டு முறையில் நேரடி அந்நிய முதலீடு 49 % லிருந்து 74 % ஆக அதிகரிப்பு

*அரசு வங்கிகளுக்கு கூடுதல் முதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு

*வங்கியின் டெபாசிட் கணக்குகளுக்கு காப்பீடு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு

*எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு; பொதுமக்களுக்கு பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் எனவும் அறிவிப்பு. மேலும் 2 பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படும்.

*பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடிவு; 2022 டிசம்பருக்குள் பங்கு விற்பனை இலக்கை எட்ட நடவடிக்கை

*வேளாண் உற்பத்தி பொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்; நேரடி கொள்முதல் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

*சென்னை, கொச்சி உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்

*நடப்பாண்டில் கோதுமை கொள்முதல் ரூ.75,060 கோடியாக அதிகரிப்பு

*விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை அதிகப்படுத்த ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு

*நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023க்குள் மின்மயமாக்கப்படும்

*தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா அமைக்கப்படும்

*தமிழகத்தில் கடல் பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும்

*நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் அமைக்கப்படும்; 15,000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்: 750 ஏகலைவா மாடல் பள்ளிகள் தொடங்கப்படும்

*காஷ்மீர் மாநிலம் லே-வில் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்

*தேசிய மொழிகளை மொழிபெயர்க்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

*டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு

*மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

*நாட்டிலேயே முதன்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்

*சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ.16.5 லட்சம் கோடிக்கு விவசாயக் கடன்கள் தர நடப்பாண்டில் இலக்கு

*தனி நபரால் தொடங்கப்படும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவ நடவடிக்கை; தனி நபர் தலைமை அமைப்பைக் கொண்ட நிறுவனங்களைத் தொடங்க புதிய வழிவகை

*ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க மத்திய அரசு முடிவு!

*2020-21 ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 9.5 % ஆக இருக்கும்; 2021-22 ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 6.8 % ஆக குறையும்

*வங்கி வட்டி, ஓய்வூதியத்தை நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமான வரி செலுத்தவும், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவும் தேவையில்லை

*சிறிய அளவிலான வருமான வரி சச்சரவுகளை புதிய குழு அமைக்கப்படும்

*வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாடு திரும்பும் போது இரட்டை வரி விதிப்பை தவிர்க்க நடவடிக்கை

*வீட்டுக் கடனில் வட்டிக்கான வருமான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

*பிப்ரவரி மாத செலவுக்காக 80,000 கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு

*இதுவரை வரியின்றி இறக்குமதி செய்யப்பட சில உதிரி பாகங்களுக்கு 2.5 % இறக்குமதி வரி விதிக்க முடிவு

*வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன் உதிரி பாகங்களுக்கு வரிச்சலுகை ரத்து

*தங்கத்துக்கான இறக்குமதி வரி 12.5 %-லிருந்து மீண்டும் 10 % ஆகக் குறைப்பு

*கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்,டி வசூலில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது

*மத்திய அரசின் பட்ஜெட்டில் வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு மாற்றமின்றி நீடிக்கிறது

*இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா உருவாக்கப்பட உள்ளது

*மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடு 41 சதவிகிதமாக நிர்ணயம்

*ஆழ்கடலில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவும் ஆழ்கடல் ஆய்வு மையம் அமைக்கப்படும்

*2021ல் உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 9.5 சதவிகிதமாக இருக்கும்; 2022ல் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 6.8 சதவிகிதமாக இருக்கும்

*உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது

*தனிநபர் வருமான வரி உச்சவரம்பு குறித்து பட்ஜெட்டில் மாற்றம் இல்லை

1 மணி நேரம் 50 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பட்ஜெட்டின்போது “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மக்களவையை ஒத்தி வைத்தார் சபாநாயர் ஓம் பிர்லா.

01.02.2021  3 : 30 P.M

Comments (0)
Add Comment