2024-ம் ஆண்டு வரை போராடத் தயார்!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், விவசாயிகள் தங்களின் கொள்கைகளில் இருந்து பின்வாங்க போவதில்லை என தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே விவசாயிகளின் போராட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாகவும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் விவசாயிகளின் போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என மத்திய அரசை எச்சரித்ததுடன் இதற்காக 4 பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்தது.

இதற்கும் எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்கத்தினர், “குழுவில் உள்ளவர்கள் வேளாண் சட்டத்தை ஆதரிப்பவர்களாக உள்ளனர். அவர்கள் மூலம் தீர்வு காண முடியாது” எனக் கூறினர்.

இந்நிலையில் போராட்டம் குறித்து பேசிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட், “டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் கருத்தியல் புரட்சி. வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு பிடிவாதமாக உள்ளது. இந்தப் போராட்டம் நீண்ட காலம் தொடரும்.

ஒவ்வொரு கிராம மக்களும் பல்வேறு சங்கத்தினரும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

மேலும் போராட்டம் எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கேள்விக்கு, வரும் 2024 ம் ஆண்டு மே மாதம் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும். அதுவரையில் தற்போதைய மத்திய அரசு வேளாண் மசோதாவை வாபஸ் பெறாவிட்டால் 2024ம் ஆண்டு மே மாதம் வரையில் போராடத் தயாராக உள்ளோம்” எனக் கூறினார்.

18.01.2021 04 : 40 P.M

Comments (0)
Add Comment