தேவையற்ற சுமைகளைச் சுமக்காதீர்கள்!

  • சரணாகதி என்பதே வலிமை மிக்கப் பிரார்த்தனை.
  • மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதகத்தின் நோக்கம்.
  • அலை பாயும் மனத்தால், எண்ணத்தின் சக்தி வீணாகிறது, ஒரே எண்ணத்தில் மனதை இருத்தும்போது சக்தி சேமிக்கப்பட்டு, மனம் வலுவடைகிறது.
  • மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.
  • கல்லைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் மூழ்கி முத்தை எடுத்து மகிழ்வதைப்போல, வைராக்கியத்தைக் கொண்டு இதயக் கடலுள் மூழ்கி ஆத்மா என்னும் முத்தை அடைதல் வேண்டும்.
  • ‘நான்’ என்ற அகந்தை எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்ற தவறான கருத்தை உண்டாக்குகிறது. உண்மையில் நாம் ஒரு கருவியே; கர்த்தா அல்ல. இதை உணர்ந்து விட்டால், அகந்தை நம்மிடமிருந்து வெளியேறி விடும்.
  • நீ ஒருவனுக்குக் கொடுத்தால் அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். நீ பிறருக்குத் தீங்கு செய்யும்போது உனக்கே தீங்கு செய்து கொள்கிறாய். ஏனெனில் பிறர் வேறு நீ வேறல்ல.
  • தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.
  • எப்படி பிரபஞ்சமெல்லாம் சிருஷ்டியின் நடுவில் பிறந்திருந்து, அதிலிருந்து பெறும் சக்தியாலும் திறனாலும், செயல்படுகிறதோ அதைப்போன்றே பூத உடலின் உள்ளேயும் மையமாக ஒன்றுண்டு. அதிலேதான் நம் இருப்பும் உள்ளது. மனித உடலின் மையம் இந்த சிருஷ்டியின் மையத்தில் இருந்து வேறுபட்டதில்லை.
  • இறக்கும் தருவாயில் உள்ள ஓர் நபரின் மனநிலை மற்றும் உயிர் பிரிவதற்கு முன் கடைசியாக தோன்றும் எண்ணங்களைப் பற்றிய முக்கியத்துவத்தை மதங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன. ஆனால் யாரும் இறுதிக்காலம் வரை காத்திராமல் அதற்கு வெகு முன்னதாகவே மனத்தைப் பக்குவப்படுத்தித் தயார் நிலையில் வைத்திருப்பதன் அவசியத்தை உணர வேண்டும்.
Comments (0)
Add Comment