16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி பலி!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, காஸிபூர், திக்ரி ஆகிய இடங்களில் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவிவரும் சூழ்நிலையிலும், விவசாயிகள் தொடர்ந்து 40-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுவரை போராட்டம் குறித்து விவசாயசங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 6 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இன்று 7-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதனிடையே டெல்லியில் கடுமையான குளிர், மழை நிலவுவதால் பல விவசாயிகள் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் உயிரிழப்பு குறித்து பேசிய பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைட், “ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி உயிரிழந்து வருகின்றனர். விவசாயிகளின் உயிரிழப்புகளுக்கு அரசு பதில் கூறியே ஆகவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

04.01.2021 04 : 44 P.M

Comments (0)
Add Comment